செப்டெம்பர் 1 முதல் அமுலாகும் முக்கிய மாற்றங்கள்!!

செப்டெம்பர் 1 முதல் அமுலாகும் முக்கிய மாற்றங்கள்!!

1 புரட்டாசி 2026 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 743


  • எரிவாயு கட்டணம் 5.6% அதிகரிப்பு

எரிவாயுவின் சராசரி குறிப்பு விலை 5.6 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு மெகாவாட் மணித்தியாலத்திற்கு வரி உட்பட 172.05 யூரோவாக உயர்கிறது. இதனால் குறிப்பு விலையுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள சுமார் 6 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்படுவர். நிலையான கட்டணத் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த உயர்வால் பாதிக்கப்படமாட்டார்கள்.

  • Fast Fashion ஆடைகளுக்கு புதிய கட்டணம்

Shein, Temu மற்றும் AliExpress போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படும் ஆடைகளும் இதன் கீழ் வரலாம். 2026ஆம் ஆண்டில் ஒரு ஜோடி காலுறைக்கு 50 சென்ட், T-shirtக்கு 2 யூரோ, Jeansக்கு 9 யூரோ, Jacketக்கு 12 யூரோ வரை கட்டணம் விதிக்கப்படலாம். 2030ஆம் ஆண்டில் இது ஒரு பொருளுக்கு 19.50 யூரோ வரை உயரக்கூடும்.

  • Lycée மாணவர்களுக்கு கைப்பேசி தடை

உயர்நிலைப் பாடசாலைகளான lycéeகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டம் செப்டெம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு பாடசாலையும் தனது விதிமுறைகளை மாற்ற வேண்டியிருப்பதால் நடைமுறைப்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். 

  • 4ஆம் வகுப்பில் நிதிக் கல்வி கட்டாயம்

பாடசாலைகளில் மற்றொரு முக்கிய மாற்றமாக, மாணவர்களுக்கு பணம், சேமிப்பு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான அறிவை வழங்கும் Educfi திட்டம் அனைத்து 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், பெற்றோரின் ஆபத்தான நடத்தையால் கல்விப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மாணவரை வேறு பாடசாலைக்கு மாற்றும் அதிகாரமும் பாடசாலை நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது.

  • நிறுவனங்களுக்கு மின்னணு விலைப்பட்டியல் கட்டாயம்

அனைத்து நிறுவனங்களும் இனிமேல் காகித வடிவிலான விலைப்பட்டியல்களுக்கு பதிலாக மின்னணு விலைப்பட்டியல்களைப் பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 250க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு செப்டெம்பர் 1 முதல் இது பொருந்தும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் இதற்காக மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  • வீட்டு புதுப்பிப்புக்கு MaPrimeRénov’ விதிமுறை மாற்றம்

தனியார் வீடுகளுக்கான MaPrimeRénov’ உதவித் திட்டத்திலும் மாற்றம் வருகிறது. வீடு எரிவாயு வெப்பமூட்டும் வசதியை தொடர்ந்து வைத்திருந்தால் குறிப்பிட்ட புதுப்பிப்பு பணிகளுக்கான உதவி இனி வழங்கப்படாது. அரசின் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான கொதிகலன்களை மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

  • வேலைவாய்ப்பு இழப்போரின் chômage நிவாரணத்தில் மாற்றம்

முதலாளியுடன் rupture conventionnelle எனப்படும் பரஸ்பர உடன்பாட்டின் மூலம் வேலை ஒப்பந்தத்தை முடித்த பின்னர் வேலை இழப்பவர்களின் chômage நிவாரண விதிமுறைகளும் மாறுகின்றன. 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்ச நிவாரண காலம் 18 மாதங்களில் இருந்து 15 மாதங்களாக குறைக்கப்படுகிறது. 

  • ஓய்வூதிய வயது தொடர்பான விதிகளில் தளர்வு

ஓய்வூதிய சீர்திருத்தம் இடைநிறுத்தப்பட்டதன் விளைவுகளும் செப்டெம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 2023ஆம் ஆண்டின் Borne ஓய்வூதிய சீர்திருத்தத்தின் கீழ் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்தும் நடவடிக்கை 2028ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1968ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 64 வயது என்ற வரம்பு இனி பொருந்தாது; அது 1969ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு பொருந்தும். 1964 முதல் 1968 வரை பிறந்தவர்களுக்கு ஓய்வூதிய வயது 62 வயது 9 மாதங்களுக்கும் 63 வயது 9 மாதங்களுக்கும் இடையில் நிர்ணயிக்கப்படுகிறது.

  • பெற்றோரின் ஓய்வூதிய கணக்கீட்டிலும் மாற்றம்

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான ஓய்வூதிய சமத்துவமின்மையை குறைக்கும் வகையில், பெற்றோரின் ஓய்வூதிய கணக்கீட்டு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தை உள்ள பெற்றோருக்கு சராசரி வருமானம் கணக்கிட பயன்படுத்தப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை 25இல் இருந்து 24 ஆகவும், குறைந்தது இரண்டு குழந்தைகள் உள்ளவர்களுக்கு 23 ஆண்டுகளாகவும் குறைக்கப்படுகிறது. இந்த மாற்றம் பொது ஓய்வூதியத் திட்டம், விவசாயத் துறை மற்றும் சுயதொழில் செய்பவர்களின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பொருந்தும்.

  • நோய்விடுப்பு காலத்திற்கு புதிய உச்சவரம்பு

செப்டெம்பர் 1 முதல் மருத்துவர்கள் வழங்கும் நோய்விடுப்புகளின் காலத்திற்கும் புதிய உச்சவரம்பு அறிமுகமாகிறது. முதல் முறையாக வழங்கப்படும் நோய்விடுப்பு அதிகபட்சம் 31 நாட்களாகவும், அதன் நீட்டிப்பு அதிகபட்சம் 62 நாட்களாகவும் மட்டுப்படுத்தப்படுகிறது. நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் வழங்கப்படலாம். 

  • மருந்தை மாற்ற மறுத்தால் மூன்றாம் தரப்பு கட்டணச் சலுகை இழப்பு

மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரைத்த அசல் மருந்துக்கு பதிலாக வழங்கப்படும் biosimilaire அல்லது hybride மருந்தை நோயாளி மறுத்தால், tiers payant எனப்படும் மூன்றாம் தரப்பு நேரடி கட்டணச் சலுகையை இழக்க நேரிடலாம். இதனால் மருந்தின் முழு விலையையும் முதலில் நோயாளியே செலுத்த வேண்டியிருக்கும். பின்னர் Assurance-maladie மூலம் திருப்பிச் செலுத்தப்படும் தொகை வழங்கப்படும்.

  • குழந்தைகளின் bronchiolite தடுப்புக்கு அதிக காப்பீட்டு உதவி

குழந்தைகளுக்கு ஏற்படும் bronchiolite நோயைத் தடுக்கும் இரண்டு முக்கிய சிகிச்சைகளுக்கான Assurance-maladie காப்பீட்டு உதவி அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் Beyfortus எதிரணு சிகிச்சையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் Abrysvo தடுப்பூசியும் இதன் கீழ் வருகின்றன. இவற்றுக்கான காப்பீட்டு திருப்பிச் செலுத்தும் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாகவும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் 100 சதவீதமாகவும் அதிகரிக்கிறது.

  • பயன்படுத்திய மின்சார கார்களுக்கு புதிய உதவித்தொகை

பயன்படுத்தப்பட்ட 100 சதவீத மின்சார கார்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க புதிய நிதியுதவியை செப்டெம்பர் 1 முதல் கோர முடியும். வருமான வரம்பு எதுவும் இல்லாத இந்த உதவி, 2017 முதல் 2023ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸில் முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு பொருந்தும். வாகனம் ஒரு தொழில்முறை விற்பனையாளர் மூலம் வாங்கப்பட வேண்டும் அல்லது வாடகைக்கு எடுக்கப்பட வேண்டும். உதவித்தொகை 337 யூரோவில் தொடங்கி, சில வீட்டு உதவி மற்றும் தனிநபர் சேவைத் தொழில் நிறுவனங்களுக்கு 2,360 யூரோ வரை செல்லக்கூடும்.

  • PFAS மாசுபாட்டுக்கு தொழிற்சாலைகளிடம் புதிய கட்டணம்

நீர் வளங்களில் PFAS எனப்படும் ‘நிரந்தர இரசாயனங்களை’ வெளியிடும் தொழிற்சாலைகளுக்கு புதிய கட்டணம் செப்டெம்பர் 1 முதல் அமுலுக்கு வருகிறது. வெளியேற்றப்படும் ஒவ்வொரு 100 கிராம் PFASக்கும் 100 யூரோ கட்டணம் விதிக்கப்படும். அதேவேளை, கழிவுநீரை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

தொடர்ந்து படிக்க