போதைப்பொருள் இல்லாத இந்தியாவே அரசின் இலக்கு: பிரதமர் மோடி
31 ஆவணி 2026 திங்கள் 12:03 | பார்வைகள் : 115
இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக உருவாக்குவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும், நமது இளைஞர்களுக்கு வலிமையான எதிர்காலத்தையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில், இந்தியா போதைப்பொருள் இல்லாத நாடாக இருப்பது அவசியம். நாட்டை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு.
விழிப்புணர்வு
போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்களை பாராட்ட விரும்புகிறேன். போதைப்பொருட்களின் ஆபத்துகளை எடுத்துரைப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பாடல்கள் மற்றும் சிறு நாடகங்களை உருவாக்க முடியுமா என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
முக்கியத்துவம்
பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான பெண் தெருவோர வியாபாரிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவி கிடைக்கிறது. அதேபோல், தூய்மை என்பதும் மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
இரவும், பகலும்!
புதிய முயற்சிகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான மேடையாக 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி விளங்குகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற அமர்நாத் யாத்திரையின்போது, ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்காக இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றினர்.
பிரத்யேக வெப்சைட்
ஏகாதசியின் புனித நாளில், மும்பையில் வசிக்கும் கிருஷ்ண சேஷாத்ரி என்பவர் பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்திய வரலாற்றை சுவாரசியமான முறையில் அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
https://www.bharatrajya.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று குறிப்பிட்ட ஒரு ஆண்டை தேர்வு செய்தால், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியை யார் ஆட்சி செய்தார்கள் என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும். நாட்டை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றுவதில் அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
நமது பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள், நமது மரபுகளை பாதுகாப்பதுடன் மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



