Paristamil Navigation Paristamil advert login

பிரமாண்டமான இணைப்பு விழா; விஜயபாஸ்கர் தரப்பில் ஏற்பாடு

பிரமாண்டமான இணைப்பு விழா; விஜயபாஸ்கர் தரப்பில் ஏற்பாடு

1 ஆடி 2026 புதன் 14:25 | பார்வைகள் : 270


புதுக்கோட்டையில் இருந்து ஏராளமானோரை அழைத்து வந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பு விழா நடத்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தவர், புதுக்கோட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமீபத்தில் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். தன் ஆதரவாளர்களுடன் த.வெ.க.,வில் இணைய  முடிவெடுத்துள்ளார். இதற்கான இணைப்பு விழா, மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில், நாளை நடக்கிறது. விஜயபாஸ்கருடன், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 20,000 பேர் இணைய உள்ளனர்.

புதுக்கோட்டையிலிருந்து, 200 பஸ்கள், 500க்கும் மேற்பட்ட கார்களில், நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்டோர், அ.தி.மு.க.,விலிருந்து விலகி த.வெ.க.,வில் இணைய உள்ளனர்.

இதேபோல, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், திருச்சி வளர்மதி உள்ளிட்டோரும், த.வெ.க.,வில் இணைய உள்ளனர்.

இணைப்பு விழா முடிந்ததும், த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜயை, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.