Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 54,000 ஐ தாண்டிய டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை

இலங்கையில் 54,000 ஐ தாண்டிய டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை

30 ஆனி 2026 செவ்வாய் 12:11 | பார்வைகள் : 176


இலங்கையில் தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.

இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

அத்துடன், நாளொன்றுக்கு பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 950 க்கும் 1,000 க்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அடுத்த மூன்று நாட்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 11,163 ஆகும்.

அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் 10,662 பேரும், மாத்தறையில் 3,921 பேரும், களுத்துறையில் 3,600 பேரும், இரத்தினபுரியில் 3,279 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 124 வலயங்கள் அதிக அவதானமிக்க வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.