Paristamil Navigation Paristamil advert login

மதிமுகவை விமர்சிக்கும் திமுகவுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: சொல்கிறார் துரை வைகோ

மதிமுகவை விமர்சிக்கும் திமுகவுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: சொல்கிறார் துரை வைகோ

30 ஆனி 2026 செவ்வாய் 06:06 | பார்வைகள் : 182


மதி.மு.க.,வை விமர்சிக்கும், தி.மு.க.,வுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்'' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ கூறினார்.

சேலம் கிழக்கு மாவட்ட, ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராஜி இல்ல திருமண விழா,  ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, ம.தி.மு.க., முதன்மை செயலரும், எம்.பி.,யுமான துரைவைகோ பேசியதாவது:

ம.தி.மு.க.,வில், உண்மையாக உழைப்பு கொடுத்த திறமைசாலிகள் சிலருக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை; அவர்களை கட்சியும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதை ஆதங்கத்துடன் கூறுகிறேன். நான், முழுமையான அரசியல்வாதியாக இன்னும் ஆகவில்லை. தேர்தலில் எந்த கட்சி என்று பார்க்காமல், நல்லவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

தமிழக அரசியலில், த.வெ.க., புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக பணம் இருந்தால் தான் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியும் என்று இருந்ததை பார்த்துள்ளோம். ஆனால், த.வெ.க., பணமில்லாமல் அரசியலில் வெற்றி என்ற மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்று பேசுவதால், அவர்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பணம் செலவழித்தால் தான் பதவிக்கு வரமுடியும்.

10 கோடி ரூபாய் இருந்தால் தான், எம்.எல்.ஏ., ஆக முடியும்; 40 கோடி ரூபாய் செலவு செய்தால் தான் எம்.பி.,யாக முடியும் என்ற நிலை இருந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 5 பைசா செலவு செய்யாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது; இது மிகப்பெரிய மாற்றம். புதிய ஆட்சி மாற்றத்தை, த.வெ.க., கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம், தமிழக அரசியலில் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், 'நாங்கள் பேச ஆரம்பித்தால், ம.தி.மு.க., மொத்த வரலாறும் முடிந்துவிடும்' என்று கூறியது குறித்து, நிருபர்கள், துரை வைகோவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும், தி.மு.க.,வுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்' என்று கூறினார்.