Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி - 10 வயது மகள் மாயம்!

இலங்கையில் மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி - 10 வயது மகள் மாயம்!

29 ஆனி 2026 திங்கள் 13:07 | பார்வைகள் : 201


கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு குறித்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காக துபார வாவிக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார்.

இதன்போது, இருள் சூழ்ந்த பகுதியில் தேடலில் ஈடுபட்ட அவர்கள், எதிர்பாராத விதமாக துபார வாவிக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழமான விவசாயக் கிணறு ஒன்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, 45 வயதுடைய தாயின் சடலம் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிணற்றுக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள 10 வயது சிறுமியை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கலேவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.