Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்பநிலை உயர்வு– பரிஸில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிப்பு!!

கடும் வெப்பநிலை உயர்வு– பரிஸில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிப்பு!!

28 ஆனி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 366


Paris நகரின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், சனிக்கிழமை 27ம் திகதி ஏற்பட்ட பெரிய மின்தடை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. குறிப்பாக 12வது வட்டாரப் பகுதியில் ஏற்பட்ட இந்த மின்கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சார வசதியின்றி தவித்தன. அதிகபட்சமாக 2,700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்விநியோக நிறுவனம் Enedis வெளியிட்ட தகவலின்படி, 12வது வட்டாரத்திற்கு மின்சாரம் வழங்கும் முக்கிய நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த தடைக்கு காரணமாகும். கடும் வெப்பநிலை காரணமாக நிலத்தடியில் உள்ள மின்கம்பிகள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், சில இடங்களில் நில வெப்பம் 80 பாகை வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த மின்தடை 9வது, 11வது, 12வது மற்றும் 13வது வட்டாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மருந்தகங்கள் மற்றும் அங்காடிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Boulevard Voltaire, Avenue Philippe-Auguste மற்றும் Rue Montgallet போன்ற பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் மின்தடை ஏற்பட்ட நிலையில், சில பகுதிகளில் மாலை 6 மணியளவில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. எனினும், நேற்று இரவு வரை சுமார் 1,400 வாடிக்கையாளர்கள் இன்னும் மின்சாரமின்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.