Paristamil Navigation Paristamil advert login

தெலுங்கானா அரசியலில் களமிறங்கினார் பவன்

தெலுங்கானா அரசியலில் களமிறங்கினார் பவன்

28 ஆனி 2026 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 177


ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தெலுங்கானா அரசியலில் களமிறங்கி உள்ளது, இரு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், முதல்வராகி உள்ளார். இவரை போல, ஆந்திர துணை முதல்வரும், நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாணும், அரசியலில் சாதிக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் தன் கட்சி அலுவலகத்தை பவன் கல்யாண் சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கு முன்பாக, 17 வயது ரசிகரை சந்தித்தது தான், தெலுங்கானா அரசியலில் களமிறங்க அவருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

பிராந்திய உணர்வு மேலோங்கிய தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ரசிகரின் பெயர் நிரஞ்சன். மரபணு நோயால் படுத்த படுக்கையாகி விட்டார். வாழ்நாளில் ஒருமுறையாவது பவன் கல்யாணை சந்திக்க வேண்டும் என, வீடியோ வெளியிட்டு அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில், ரசிகரின் வீடு தேடி சென்ற போது தான், நெகிழ்ச்சியான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. படுக்கையில் இருந்தபடியே அந்த ரசிகர், பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களின் வசனங்களை பேச, அதை கேட்டு அவர் உருகி போனார்.

உடனடியாக, கையில் இருந்த கணிசமான தொகையை அந்த ரசிகரிடம் வழங்கி, வாழ்த்திய பவன், வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது, பிராந்திய உணர்வுகளையும் கடந்து, பவன் கல்யாணை காண ஏராளமான கூட்டம் கூடியது.

ஒருபுறம் ரசிகரின் அன்பு. மறுபுறம் தன்னை காண திரண்ட மக்கள் கூட்டம் என, நேரில் பார்த்ததும் பவன், கண் கலங்கினார். அதன் பின்னரே, தெலுங்கானா அரசியலில் களமிறங்கும் முடிவை தீர்க்கமாக எடுத்து, ஹைதராபாதில் கட்சி அலுவலகத்தை திறந்தார்.

இந்த அரசியல் பிரவேசத்திற்கு பா.ஜ.,வும் பக்க பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியுடன் இணக்கமாக இருந்த காரணத்தால், இதுவரை காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு, தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மக்கள் ஓட்டளித்து வந்தனர்.

தற்போது, தெலுங்கு தேசம் க ட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாண் நேரடியாக களம் காண்பதால், அவர்களின் ஓட்டுகள் நிச்சயம் பவன் கல்யாணுக்கே விழும் என, பா.ஜ., கணக்கு போடுகிறது. இதனால், தெலுங்கானாவில் அடுத்து வரும் அனைத்து தேர்தல்களையும், பா.ஜ.,வுடன் இணைந்து சந்திக்க பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

அதற்கேற்றபடி, அவரது பலத்தை சோதிக்கும் வகையில் ஆகஸ்டில், 300 நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பவன் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், இரு மாநிலங்களிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.