Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச உறவுகளிலும் ஓட்டு வங்கி அரசியலா? சோனியாவுக்கு பா.ஜ., கண்டனம்

சர்வதேச உறவுகளிலும் ஓட்டு வங்கி அரசியலா? சோனியாவுக்கு பா.ஜ., கண்டனம்

28 ஆனி 2026 ஞாயிறு 09:48 | பார்வைகள் : 189


இஸ்ரேல் - காசா போர், நம் நாட்டின் வெளியுறவு கொள்கை குறித்து, காங்.,  பார்லி., குழு தலைவர் சோனியா விமர்சித்து கட்டுரை எழுதிய நிலையில், சர்வதேச உறவுகளிலும் ஓட்டு வங்கி அரசியல் செய்வதாக அவருக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றில், காங்., பார்லி., குழு தலைவர் சோனியா எழுதிய கட்டுரையில், 'பாலஸ்தீனர்களின் குழந்தைகளை குறிவைப்பதன் மூலம், அவர்களின் இருப்பையே அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் செயல்படுகிறது. இது, காட்டுமிராண்டித் தனமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காப்பது தார்மிக ரீதியாக கண்டிக்கத்தக்கது' என, விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:

காசா பற்றி வாய்க்கிழிய பேசும் காங்., வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைகள் குறித்து மவுனம் காப்பது ஏன்? வெளியுறவு கொள்கையிலும் கூட அக்கட்சி இரட்டை வேடம் போடுகிறது. வெளியுறவு கொள்கையை கூட ஓட்டு வங்கி அரசியலின் அடிப்படையில் தீர்மானிக்க அக்கட்சி நினைக்கிறது.

காசா விவகாரத்தில் நம் நாடு நிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐ.நா., சபையிலும் ஓட்டளித்துள்ளது. மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளது. அதனால் தான், பாலஸ்தீனத்தின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

நம் வெளியுறவு கொள்கை உலகளாவிய மோதல்களில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த நாட்டை அனுமதித்துள்ளது. பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பேசக்கூடிய நிலையில் நம் நாடு உள்ளது. உக்ரைன் - ரஷ்யா, அமெரிக்கா -ஈரான் என, அனைத்து தரப்பினரிடமும் நம்மால் பேச முடிகிறது.

நாம் இன்று அணி சேரா நாடாக இல்லை. அனைத்து நாடுகளுடனும் இணக்கமாக செயல்படும் நாடாக இருக்கிறோம். வெளியுறவு கொள்கை அணுகுமுறையில், மலிவான ஓட்டு வங்கி அரசியலை காங்., ஒரு பகுதியாக மாற்றி உள்ளது. இது, அக்கட்சிக்கு வழக்கமாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.