Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் ம.தி.மு.க.?

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் ம.தி.மு.க.?

27 ஆனி 2026 சனி 14:28 | பார்வைகள் : 159


கடந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்று இருந்தது. இதில் அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவை அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் நின்றனர். ஆரம்பத்தில் இதற்கு மதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உதயசூரியன் சின்னம்ஆனால் திமுக கடும் அழுத்தம் கொடுக்கவே வேறு வழியின்றி 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் நிற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

திமுக கூட்டணிஇந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு இல்லாமல் தவித்த தமிழக வெற்றிக்கழக அரசுக்கு திமுக கூட்டணியில், தங்களது சின்னத்திலே போட்டியிட்ட பிற அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மூன்று கட்சிகள் ( காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல்.) அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவுஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மதிமுகவால் த.வெ.க.வுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்க முடியவில்லை. இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முனைப்பில் மதிமுக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற  உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.இந்நிலையில் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் ராஜினாமா செய்ய அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று உயர்நிலை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை (27.06.2026) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை (ஜூன் 27ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வைகோ அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி.மு.க.வில் சீர்காழி எம்.எல்.ஏ.இந்த சூழலில் மதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது தி.மு.க. உறுப்பினராக உள்ளதால், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து ம.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி வரும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.