Paristamil Navigation Paristamil advert login

ஒரே இரவில் 660 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா

ஒரே இரவில் 660 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா

26 ஆனி 2026 வெள்ளி 15:11 | பார்வைகள் : 123


ரஷ்யா, கடந்த இரவு மட்டும் 660 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. இது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்த தாக்குதல்கள் மாஸ்கோ, கிரிமியா, கருங்கடல், அசோவ் கடல் உள்ளிட்ட 13 பிராந்தியங்களில் நடந்தன. ட்ரோன் தாக்குதல்களில், மாஸ்கோவுக்கு தெற்கே உள்ள டுலா பகுதியில் ஒரு வீடு சேதமடைந்து, ஒரு பெண் காயமடைந்தார்.

மேலும், நோவோமோஸ்கோவ்ஸ்க் பகுதியில் உள்ள Azot தொழிற்சாலை சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை, ரஷ்யாவின் வெடிபொருள் உற்பத்திக்கு முக்கியமானதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முன்பு குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைன், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் முன்னேற்றமில்லாமல் கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கிறது.

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “ரஷ்யா, பெலாரஸை போரில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார். அவர், பெலாரஸ் எல்லையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று கூறினார்.

ஆனால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் பெஸ்கோவ், “இது உண்மைக்கு புறம்பானது” என்று கூறியுள்ளார்.

பெலாரஸ் ஜனாதிபதி லுகஷென்கோ, “நாங்கள் போரில் ஈடுபட விரும்பவில்லை. உக்ரைன் எங்களை இழுக்க முயற்சிக்க கூடாது” என்று எச்சரித்துள்ளார்.

பெலாரஸ், 2022-இல் ரஷ்ய படைகள் தன் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதித்திருந்தாலும், தற்போது நேரடியாக போரில் ஈடுபட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.