வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்க்கும் ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு
24 ஆனி 2026 புதன் 12:02 | பார்வைகள் : 191
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மீட்கத் தயாராகி வருகிறது.
குறித்த விவகாரம் தொடர்பில் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் தெரிவிக்கையில், ஈரான், ஓமான், அமெரிக்கா, பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் தொழில்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்தச் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பான வழிசெலுத்தலுக்கான நிபந்தனைகளையும் முழுமையாகச் சரிபார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கடந்த வாரம் ஒரு இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து மோதல் போக்கிலேயே நீடித்து வருகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, செவ்வாயன்று சமூக ஊடகங்களில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முழுமையாகவும் விரிவான அணுசக்தி ஆய்வுகளுக்கு ஈரான் முழுமையாகவும் முழுமனதுடனும் ஒப்புக்கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.
ஆனால், ட்ரம்பின் பதிவிற்கு பதிலளித்த ஈரான், கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குண்டுவீசித் தாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களை ஐ.நா.வின் கண்காணிப்பு அமைப்பால் ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது என்று கூறியது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது தெரிவிக்கையில், எங்கள் தற்காப்புத் திறன்கள் குறித்து, எந்தச் சூழ்நிலையிலும், யாருடனும் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்றார்.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மார்கோ ரூபியோ ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்கும் பொருட்டு ரூபியோ செவ்வாய்க்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வளைகுடாப் பிராந்தியத்திற்கான தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்; மேலும் அவர் குவைத் மற்றும் பஹ்ரைனுக்கும் செல்லவுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் முயன்று வரும் நிலையில், அந்த நீரிணையில் எந்தவொரு நாடும் கட்டணம் விதிக்க அனுமதிக்கப்படாது என்று ரூபியோ எச்சரித்தார்.
இதனிடையே, வளைகுடாப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் கப்பல்களின் எண்ணிக்கை குறித்த தினசரி அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், மீண்டும் திறக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தது 172 கப்பல்கள் பயணித்துள்ளன. இதில் சனிக்கிழமை அன்று மட்டும் 42 கப்பல்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan