Paristamil Navigation Paristamil advert login

உபரி மின்சாரம் விற்பனை; ரூ.535 கோடி வருவாய் ஈட்டியது மின் வாரியம்

உபரி மின்சாரம் விற்பனை; ரூ.535 கோடி வருவாய் ஈட்டியது மின் வாரியம்

20 ஆனி 2026 சனி 08:21 | பார்வைகள் : 190


கடந்த மார்ச் முதல் மே வரை, தமிழக மின் தேவையை பூர்த்தி செய்தது போக, மீதமுள்ள 308 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை விற்று, 535 கோடி ரூபாய் வருவாயை, தமிழக மின் வாரியம் ஈட்டியுள்ளது.

தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது, பகல் நேரங்களில், 15,000 மெகாவாட்டாகவும், காலை மற்றும் இரவில், 18,000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கிறது. கோடை காலத்தில், 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது. மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, வாரியத்திடம் போதுமான உற்பத்தி இல்லை.

எனவே, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த பிப்., முதல், சூரியசக்தி மின் உற்பத்தி அதிகம் உள்ளது. காலை, 9:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, மின் தேவை குறைவாக உள்ள நிலையில், சூரியசக்தி மின்சாரம் அதிகம் கிடைக்கிறது.

அதில், தமிழக மின் தேவைக்கு போக உபரி மின்சாரத்தை, மின்சார சந்தையில் மின் வாரியம் விற்பனை செய்கிறது. அதன்படி, கடந்த மார்ச் முதல் மே வரை, 308 கோடி யூனிட்கள் மின்சாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், 535 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஒரு யூனிட் விலை சராசரியாக, 2 - 3 ரூபாயாக உள்ளது.