உலகின் வளர்ச்சிக்கு இந்திய இளைஞர்கள் தலைமை வகிப்பர்: பிரதமர் மோடி நம்பிக்கை
20 ஆனி 2026 சனி 07:19 | பார்வைகள் : 178
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் இளைஞர்கள் உலகின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்குத் தலைமை தாங்குவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 'பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்' கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீ ழ் 15 லட்சம் ஊழியர்களுக்கான தவணையாக 2,400 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். டில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஊக்கத்தொகையை நேரடியாக விடுவித்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்துக் கொண்டு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் திரும்பினேன். ஜி7 மாநாட்டில் வளர்ந்தநாடுகளின் தலைவர்களை சந்தித்தேன். இந்திய இளைஞர்களின் திறனை உலக நாடுகள் விவாதிக்கின்றன. இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலக நாடுகள் அங்கீகரிக்க துவங்கி உள்ளன. இதுபோன்ற நேரத்தில், ஒவ்வொரு இந்திய இளைஞரும் தனது ஆற்றலையும் வாய்ப்புகளாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்துடன், பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்' துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் உதவியுடன் இதுவரை 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் இளைஞர்கள், தங்களது முதல் பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இது வெறும் நிதியுதவி மட்டும் இல்லை. அவர்களின் கடின உழைப்புக்கு அளிக்கப்படும் அங்கீகாரம்.
உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இளைஞர்களின் திறமை, கனவுகள், ஆற்றல்கள் ஆகியவற்றில் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞரும் தங்களது ஆற்றலுக்கு ஏற்ப முன்னேறுவதை உறுதி செய்வதே எங்களது முயற்சியாகும். திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். புதிய யோசனைகள் உள்ளவர்களுக்குப் புத்தாக்கத்திற்கான ஒரு தளம் கிடைக்க வேண்டும். சுயமாகச் சாதிக்க விரும்புபவர்களுக்கு முழு ஆதரவும் கிடைக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், கடந்த 12 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான ஒவ்வொரு வழியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் நாட்டில் 500 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்தன. இன்று , பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்க்கலாம்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் இளைஞர்கள் உலகின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்குத் தலைமை தாங்குவார்கள் என்ற நம்பிக்கையை இந்தப் புள்ளிவிவரங்கள் அளிக்கின்றன. இன்று உலகில் உள்ள அனைவரும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்தியா உலக நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் செய்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan