Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் புதிய மெட்ரோ பேருந்துகள்

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் புதிய மெட்ரோ பேருந்துகள்

19 ஆனி 2026 வெள்ளி 17:02 | பார்வைகள் : 194


இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மிகவும் திறமையானதாகவும், தரமானதாகவும் மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள 104 புதிய 'மெட்ரோ' பேருந்துகளை நாட்டுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபொட்டோன் இன்டர்நேஷனல் கோர்ப்பரேஷன்  நிறுவனத்திடமிருந்து இப்பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இப்பேருந்துகளின் தொழில்நுட்ப நிலைமைகளை ஆராய்வதற்கும், இலங்கையின் வீதி அமைப்புக்கு ஏற்றவாறு அவற்றை மேலும் வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் மெட்ரோ ட்ரான்ஸிட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தற்போது சீனாவின் ஃபொட்டோன் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அந்த நிறுவனத்தின் உற்பத்தி வரலாறு, சீனாவில் மெட்ரோ பேருந்து சேவை இயங்கும் விதம் மற்றும் மெட்ரோ பேருந்து வடிவமைப்பு அமைப்பின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராய்வதற்கு இலங்கை தூதுக்குழுவினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த புதிய மெட்ரோ பேருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்திடப்பட்டதுடன், அந்த ஒப்பந்தத்தின்படி 104 பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதேவேளை, இப்பேருந்து சேவைகளை மையமாகக் கொண்டு மேல் மாகாணத்தில் கடவத்தை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் புதிய மெட்ரோ சேவை முனையங்களை அமைக்கும் பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.