Paristamil Navigation Paristamil advert login

மத்திய அரசின், பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது: முதல்வர் சதீசன்

மத்திய அரசின், பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது: முதல்வர் சதீசன்

18 ஆனி 2026 வியாழன் 11:32 | பார்வைகள் : 185


மத்திய அரசின், 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தில் இருந்து கேரளா விலகாது. எனினும், மாநிலத்திற்கு பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கும் வகையில் நிபந்தனைகளுடன் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்போம்,'' என, அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசைச் சேர்ந்த சதீசன், முதல்வராக பதவியேற்றார்.  மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய இடதுசாரி அரசு, மத்திய அரசின், பி.எம்., ஸ்ரீ எனப்படும், 'பிரதமரின் வளர்ந்து வரும் இந்தியாவுக்கான பள்ளிகள்' திட்டத்தில், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் இணைந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் காங்., கூட்டணி அரசு நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற குழப்பம் நிலவியது.

இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில், முதல்வர் சதீசன் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம்  நடந்தது. இதில், பி.எம்., ஸ்ரீ திட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  கூட்டத்துக்கு பின், முதல்வர் சதீசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது. எனினும், சில நிபந்தனைகளுடன் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். முந்தைய இடதுசாரி அரசு, இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து, ஏற்கனவே, 99 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளதால், இத்திட்டத்தை தொடர வேண்டிய கட்டாய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சட்ட ரீதியான அம்சங்கள் மற்றும் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய, அமைச்சர்கள் என்.சம்சுதீன், ரோஜி எம்.ஜான், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு ஆகியோர் அடங்கிய துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவின் அறிக்கையின்படி, பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் உரிமை, எந்தெந்த பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற உரிமைகள் மாநில அரசுக்கு இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் நிபந்தனையாக முன்வைப்போம். பள்ளிகளில் எந்தவிதமான வகுப்புவாத அஜெண்டாவும் புகுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே மாநில அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

இத்திட்டத்துடன் சேர்த்து, கேரளாவின் பொது கொள்முதல் முறையை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். தற்போதுள்ள கொள்முதல் கையேடு மிகவும் பழமையானது. மின்- கொள்முதல் போன்ற நவீன வசதிகள் அதில் இல்லை. கொள்முதல் முறையை வெளிப்படையாகவும், வேகமாகவும், அறிவியல் பூர்வமாகவும் மாற்ற பொதுப்பணித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், நீர்வளம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.