Paristamil Navigation Paristamil advert login

ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில்; நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில்; நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

17 ஆடி 2026 வெள்ளி 08:23 | பார்வைகள் : 132


ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில் போக்குவரத்தை, ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில்  நாளை ஜூலை 17ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நிலக்கரி, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், 'ஹைட்ரஜன்' ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த ரயில், ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் - லலித் கேரா இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த் - சோனிபட் இடையே 10 பெட்டிகளுடன் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நாடுகளின் பட்டியலில் நம் நாடும் இணைய உள்ளது. இந்த ரயில், டீசலுக்குப் பதிலாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துகிறது. இதன்மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் இருந்து கரியமில வாயு போன்ற நச்சு புகைக்கு பதிலாக, துாய்மையான நீராவி மட்டுமே வெளிவரும்.

இதன்படி சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறையும். இதேபோல் வழக்கமான ரயில்களை விட, சத்தம் மற்றும் அதிர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கும். ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில் போக்குவரத்தை, ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில்  நாளை ஜூலை 17ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.