Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோய் அபாயத்தை எப்படி குறைப்பது?

புற்றுநோய் அபாயத்தை எப்படி குறைப்பது?

16 ஆடி 2026 வியாழன் 15:53 | பார்வைகள் : 155


குளோபோகான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை குறித்த அறிக்கையொன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14.1 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகளும், 9,16,000-க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

தரவுகளின்படி பெண்களிடையே மார்பகப் புற்றுநோயும், அதனைத் தொடர்ந்து கருப்பை வாய்ப் புற்றுநோயும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதே சமயம், புகையிலைப் பயன்பாடு காரணமாக ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள, புற்றுநோய்க்கு காரணமான முக்கியமான 5 பழக்கங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். அவை என்னென்ன என்ற விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

புகையிலைப் பயன்பாடு: இந்தியாவில் புற்றுநோய்க்கான காரணிகளில், புகையிலையே முதன்மையானதாகத் திகழ்கிறது. புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது, அதே சமயம் புகையிலை மெல்லுதல், குட்கா மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவை உலகின் மிக அதிக வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த அபாயத்தைக் குறைப்பதற்கு, அனைத்து வகையான புகையிலைப் பயன்பாட்டையும் கைவிடுவது மிக மிக அவசியம்.

உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் உடல் செயல்பாடின்மை: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், மிகக் குறைந்த உடற்பயிற்சி செய்வதும் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. இந்த உடல் பருமன், மார்பக, பெருங்குடல் மற்றும் கருப்பை உட்சுவர் புற்றுநோய்களுடன் தொடர்புடையது. எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், அழற்சியைக் குறைக்கவும், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது புற்றுநோய் அபாயத்தை நமக்கு குறைக்கின்றன.

ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகள், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுமுறைகள், பழங்கள் - காய்கறிகள் குறைவாக சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் பெருங்குடல் மற்றும் பிற புற்றுநோய்களைத் தூண்டுகின்றன.

மது அருந்துதல்: தொடர்ந்து அதிகமாக மது அருந்துவது கல்லீரல், வாய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பயன்பாட்டுடன் சேர்ந்த மதுப்பழக்கம், புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். எனவே நிச்சயம் இந்த இரண்டையும் ஒழிக்க வேண்டும்.

ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பதும், பரிசோதனைகளைத் தவிர்ப்பதும்: இந்தியாவில் தாமதமான நோயறிதல் பெரும் பிரச்சனையாக பல ஆண்டுகளாகவே நீடிக்கிறது. இன்று பல நோயாளிகள் நோய் முற்றிய நிலையில்தான், தங்களுக்கு நோய் இருப்பதையே கண்டறிகின்றனர். முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை எளிதில் குணப்படுத்தலாம்.

 எல்லாப் புற்றுநோய்களையும் தடுக்க முடியாது என்றாலும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றின் அபாயத்தை நம்மால் குறைக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து வகையான புகை மற்றும் மதுவை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவைப் பின்பற்றுவதுதான். அதேபோல சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க வேண்டும்.

புற்றுநோய்க்கான குடும்ப பின்னணி இருப்பவர்கள், HPV மற்றும் ஹெபடைடிஸ் B-க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். வழக்கமான உடல் பரிசோதனைகள் மற்றும் வயதுக்கு ஏற்ற புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். எந்த அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.