Paristamil Navigation Paristamil advert login

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

16 ஆடி 2026 வியாழன் 14:05 | பார்வைகள் : 153


மியன்மாரில் நீடித்துவரும் வன்முறைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் படகுகள் மூலம் கடல்வழியாகப் பயணித்த 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், மோசமான வானிலையினால் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் இரு முக்கிய இடம்பெயர்வு அமைப்புகள் வியாழக்கிழமை 16.07.2026 கவலை வெளியிட்டுள்ளன.

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,

கடந்த ஜூன் மாத இறுதியில் மியன்மாரின் மேற்கு ராகினே மாநிலத்திலிருந்து சுமார் 250 பயணிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று, புறப்பட்ட சில நாட்களிலேயே தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.

சுமார் 280 பயணிகளுடன் பயணித்த மற்றுமொரு படகு, கடந்த ஜூலை 8 ஆம் திகதி மியன்மாரின் அயேயர்வாடி கடற்கரைக்கு அப்பால் கடலில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

வழக்கமான கடல் பயணக் காலம் அல்லாத, மிக மோசமான கடல் கொந்தளிப்பு, பலத்த மழை மற்றும் பிராந்திய வெள்ளப்பெருக்கு நிலவும் தற்போதைய ஆபத்தான சூழ்நிலையிலேயே இந்த இரு படகுகளும் பயணித்துள்ளன.

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடூரமான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை 100,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மார் இராணுவத்திற்கும் 'அரக்கான் படை' என்ற கிளர்ச்சியாளர் குழுவிற்கும் இடையே ராகினே மாநிலத்தில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களில் வசிக்கும் ரோஹிங்கிய மக்களும் அங்குள்ள போதிய வசதியின்மை மற்றும் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு அபோன்ற இயற்கை அனர்த்தங்களினால் , மீண்டும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு தப்பியோட முயன்று வருகின்றனர் எனத் தெரி

மியன்மாரின் ராகினே மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்கியாக்கள், குடியுரிமையற்ற சிறுபான்மை முஸ்லிம் இனக்குழுவினர் ஆவர்.

தசாப்தங்களாக மியான்மர் அரசினால் துன்புறுத்தப்பட்டு வரும் இவர்களை அமெரிக்கா 'இனப்படுகொலைக்கு' உள்ளாக்கப்பட்டவர்களாக வகைப்படுத்தியுள்ளது.

தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் வங்காளதேச முகாம்களிலும், சுமார் 630,000 பேர் மியான்மரின் ராகினேவிலும் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும், பெருமளவிலான உயிர இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என ஐநா அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

உலகின் மிக ஆபத்தான இந்த கடல்வழிப் பாதையில் மனிதக் கடத்தல் வலைப்பின்னல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேடல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்தவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.