கோவில் நிலத்திற்கான தடை நீக்கம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
15 ஆடி 2026 புதன் 08:22 | பார்வைகள் : 139
கரூர் மாவட்டத்தில், 4 கோவில்களுக்கு சொந்தமான, 3,085 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய விதித்த தடையை நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், மூன்று பிரதான கோவில்களின் சொத்து விவகாரத்தில், பல ஆண்டுகளாக பதிவு தடையில் இருந்த, 3,085 ஏக்கர் நிலங்கள் மீதான பத்திரப்பதிவு தடை ஆணையை தமிழக அரசு விலக்கி கொண்டது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன், சேலம் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, முறையிட்டதாவது:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலுார் விக்ருதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 3,084.95 ஏக்கர் நிலங்கள், 15 கிராமங்களில் உள்ளன.
இவற்றிற்கு, 3,390 தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அத்தடையை நீக்குவதாக கலெக்டர் ஜூலை 9ல் உத்தரவிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் அரசின் முன் அனுமதியின்றி கோவில் நிலங்களை பதிவு செய்ய, அதிகாரிகள் வழிவகுத்துள்ளனர். நிலத்தின் மதிப்பு, 25,000 கோடி.
ஆக்கிரமிப்பாளர்களின் நலனுக்காக தடை நீக்கப்பட்டுள்ளது. இது, தன்னிச்சையானது. அதை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளேன். அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.,11க்கு ஒத்திவைத்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire