Paristamil Navigation Paristamil advert login

திமுக - எம்பிக்கள் ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்வேன்: துரை வைகோ

திமுக - எம்பிக்கள் ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்வேன்: துரை வைகோ

14 ஆடி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 137


திமுக - எம்பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், நானும் தயார்,'' என, ம.திமுக முதன்மை செயலர் துரை வைகோ கூறினார்.

திருச்சியில்  அவர் அளித்த பேட்டி:

திருச்சி லோக்சபா தொகுதி எம்பியாக நான் வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு உள்ளது. அவர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் பங்கும் உள்ளது. என்னை எம்பி பதவியை ராஜினாமா செய்ய சொல்லும் திமுக தங்கள் கட்சி எம்பிக்களையும் ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்ய தயார். திமுக மீண்டும் தேர்தலை சந்தித்தால், அதற்கு ஒரு எம்பி கூட கிடைக்காது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், ஒரு தொகுதிக்கு குறைந்தது 20 கோடி ரூபாயும், சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் 100 கோடி ரூபாய் வரையும் செலவிடப்பட்டது. ம.திமுக உள்பட, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு, 234 தொகுதிகளிலும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை.

இறுதியாக அ.திமுகவும், திமுகவும் கூட்டணி வைக்க முடிவு செய்ததை இரு கட்சியினரும் ஏற்கவில்லை. அதனால் தான், அ.திமுக - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். திமுகவில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஒன்றிய செயலர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.,வுக்கு வந்துள்ளனர்.

நான், திமுகவையும், அண்ணாதுரையையும், கருணாநிதியையும் மதிக்கிறேன். ஆனால், தற்போது திமுகவின் 'பவர் சென்டர்' ஒரு சிலர் கையில் தான் உள்ளது.

பாஜவை எதிர்க்க திமுகவும் தவெகவும் ஒரணியில் சேர வேண்டும் என்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனின் கருத்து ஏற்படையதல்ல. 'போதையில்லா தமிழகம்' என முதல் மாநாடு நடத்திய அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். அவருக்கு பின்னால் பா.ஜ., இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 'ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு மோசமான வரலாறு உண்டு; ஒரு புனிதமான எதிர்காலம் உண்டு' என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்