கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு! சிறுவர் உட்பட மூவர் காயம்!
13 ஆடி 2026 திங்கள் 11:45 | பார்வைகள் : 518
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள போர் மோதலின் தொடர்ச்சியாக, கத்தார் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அவற்றின் சிதறிய பாகங்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் ஒரு சிறுவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
கத்தார் உள்நாட்டு அமைச்சு இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கத்தார் வான்பரப்புக்குள் ஊடுருவ முயன்ற ஈரானிய ஏவுகணைகளைத் தங்களது ஆயுதப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகக் கத்தார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், வான்வெளியில் ஏவுகணைகள் வெடித்ததால் சிதறிய இரும்புப் பாகங்கள் மற்றும் குப்பைகள் தோஹா நகரின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. இதில் ஒரு சிறுவர் உட்பட மூன்று சிவிலியன்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கத்தார் உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,
"பாதுகாப்பு அதிகாரிகள் முழு தயார் நிலையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகளை அமெரிக்கா குண்டுவீசி அழித்ததற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள பல நாடுகளை நோக்கி ஈரான் 12.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை ஏவிப் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
தங்களை நோக்கி வந்த ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எதிர்கொண்டு அழித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் போர் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி புகுந்துள்ளனர்.
ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் ஜோர்தான் நாட்டு எல்லைக்குள் விழுந்துள்ளன. எனினும், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஜோர்டான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் பிராந்தியத் தளங்களை முற்றாக முடக்கியுள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது. எனினும், இந்த விபரங்களை அமெரிக்காவோ அல்லது சம்பந்தப்பட்ட பிற நாடுகளோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பிரின்ஸ் ஹஸன் விமானத் தளத்திலிருந்த அமெரிக்காவின் எம்கியூ-9 (MQ-9) ட்ரோன் நிறுத்தகங்கள் மற்றும் கட்டளை மையத்தை அழித்துள்ளதாக ஜோர்தான்தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ரேடார் தளம் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்புத் தளத்தைத் தாக்கியதாகக் குவைத் தெரிவித்துள்ளது.
அல் உதைத் தளத்திலிருந்த அமெரிக்கப் போர் விமானப் பராமரிப்பு மையம் மற்றும் தலைமையகத்தை ஏவுகணைகள் மூலம் தகர்த்ததாக கத்தார் உரிமை கோரியுள்ளது.
ஓமான் துகம் துறைமுகத்தில் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் தளவாட ஆதரவு வழங்கும் தளங்களை அழித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சைப்ரஸ் நாட்டு வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் மாயமாகியுள்ள சூழலில், வளைகுடா நாடுகள் முழுவதும் இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் தற்பொழுது உச்சக்கட்டப் போர் பதற்றம் நிலவி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire