Paristamil Navigation Paristamil advert login

யாழில் முதியவருக்கு அதிர்ச்சி - தாக்குதல் நடத்தி பணக்கொள்ளை!

 யாழில் முதியவருக்கு அதிர்ச்சி - தாக்குதல் நடத்தி பணக்கொள்ளை!

12 ஆடி 2026 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 144


யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வியாபார நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த ஒருதொகை பணம் இருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையிலிருந்து நவாலி நோக்கிச் செல்லும் வீதியூடாகத் தனது வியாபாரப் பணிகளுக்காகச் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் அவ்வீதியால் வந்த இரண்டு நபர்கள் முதியவரை வழிமறித்து, முகவரி அல்லது இடம் கேட்பது போலப் பாசாங்கு செய்துள்ளனர்.

முதியவர் அவர்களுக்குப் பதிலளிக்க முற்பட்ட வேளையில், திடீரென அவர் மீது தாக்குதல் நடத்திய அக்குறித்த நபர்கள், அவர் வியாபாரத்திற்காகத் தன்னிடம் வைத்திருந்த ஒருதொகை பணத்தைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி  பாதுகாப்பு கேமராக்களில் இக்காட்சிகள் பதிவாகியிருக்கக்கூடும் எனப் பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குத் உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிசிரிவி காட்சிகளின் உதவிகளுடன் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.