Paristamil Navigation Paristamil advert login

கத்தாரை நவீனமயமாக்கி மாற்றங்களுக்கு வித்திட்ட அரசர் காலமானார்

கத்தாரை நவீனமயமாக்கி மாற்றங்களுக்கு வித்திட்ட அரசர் காலமானார்

12 ஆடி 2026 ஞாயிறு 15:40 | பார்வைகள் : 151


கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ஹமத் தனது 74வது வயதில் காலமானார்.

1995ஆம் ஆண்டில் கத்தாரில் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டை பெருமளவில் நவீனமயமாக்கியவர் ஷேக் ஹமத் பின் கலீஃப்.

கத்தாரின் வரலாற்றிலேயே மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றில் ஷேக் ஹமத் தலைமை வகித்தார். இதன்மூலம் கத்தாரின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

மன்னர் என்று பொருள்படும் "அமீர்" ஆக உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக 1993 முதல் 2013 வரை இவர் இருந்தார்.

சிறிய நாடான கத்தாரின் பொருளாதாரம், உலகளாவிய நற்பெயர் மற்றும் அரசியல் லட்சியங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் வகையிலான விரைவான மாற்றங்களுக்கு வித்திட்ட இவர், 18 ஆண்டுகளுக்கு பிறகு மரபுகளை மீறி தனது மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஷேக் ஹமத் (Sheikh Hamad) 74 வயதில் காலமானதாக கத்தாரின் உயர்மட்ட அரசு அமைப்பான Amiri Diwan அறிவித்தது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்த விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.

கத்தாரில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஷேக் ஹமத் முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

அவரது இந்த முயற்சி, நாட்டின் பிரம்மாண்டமான எரிவாயு இருப்பை உலக சந்தைகளுக்குக் கொண்டு செல்ல உதவியது.

அத்துடன் கத்தாரை உலகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒரு நாடாக மாற்றியது மட்டுமின்றி, அதன் அபரிமிதமான செல்வ வளத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது.