Paristamil Navigation Paristamil advert login

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 15 இந்தியர்கள் உயிரிழப்பு

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 15 இந்தியர்கள் உயிரிழப்பு

12 ஆடி 2026 ஞாயிறு 06:59 | பார்வைகள் : 150


வியட்நாம் படகு விபத்தில் 10  தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டது.

ஹான் மே ரட் ங்கோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், அந்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

இதனை கண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் அவர்களை மீட்க உதவியது. கடற்படை, கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டது.

ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையின்படி, 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்த 15 பேரின் பெயர் பட்டியலையும், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சிறப்பாக பணியாற்றியதற்காக லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. லாவா நிறுவனம் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அந்த வேகப் படகு அசாதாரணமான அலைகளையும் காற்றையும் எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வியட்நாமிலுள்ள இந்திய தூதரகம், "ஒரு துயரச் சம்பவமாக, சில மணி நேரங்களுக்கு முன்பு வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. முதல் கட்டுப்பாட்டு அறையை 84362817930, 84915523714 மற்றும் 84334520414, 84913089165 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான நீல நிற நீர் மற்றும் வெண்மணலுக்காகப் புகழ்பெற்ற மே ரட் தீவை அடைய பொதுவாக சுமார் 20-40 நிமிடங்கள் படகு அல்லது வேகப்படகில் பார்வையாளர்கள் பயணிக்கின்றனர்.