தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு!
12 ஆடி 2026 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 134
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்குத் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா 50 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த இரண்டு கல்லூரிகளிலும் தலா 100 ஆக இருந்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒரே நேரத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. அதற்குப் பிறகு, புதிய மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்திற்கு வரவில்லை, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் ஏதும் கூடுதலாக அதிகரிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது இந்த 100 கூடுதல் இடங்களின் சேர்க்கை மூலம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஒட்டுமொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக புதிய உச்சத்தைத் தொடவுள்ளது. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இதையும் வாசிக்க : துணைவேந்தர் நியமனம் vs UGC.. கல்வித் துறையும் இந்திய அரசமைப்பு சட்டமும்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
நாமக்கல் மற்றும் திருப்பூரைத் தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதற்கான அனுமதியை மாநில மருத்துவத் துறை தற்பொழுது தீவிரமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவ இடங்கள் தற்போது உயர்த்தப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருக்கும் தமிழக மாணவர்களிடையே, குறிப்பாக ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire