Paristamil Navigation Paristamil advert login

'அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்..' மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

'அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்..' மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

12 ஆடி 2026 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 131


அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மாநிலங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப் பாடல், அதைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக தேசிய கீதமும் (ஜன கண மன) பாடப்பட வேண்டும். மேலும் தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வரிசைமுறையைத் தவறாமல் பின்பற்றுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தேசிய கீதம் அல்லது தேசியப் பாடல் கட்டாயம் இசைக்கப்பட அல்லது பாடப்பட வேண்டிய நிகழ்வுகள் மற்றும் அவை இசைக்கப்பட அல்லது பாடப்படக்கூடிய (விருப்பத்திற்குரிய) நிகழ்வுகள் குறித்த விரிவான பட்டியலை தனது உத்தரவுகள் உள்ளடக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.