Paristamil Navigation Paristamil advert login

மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வரி வசூலிக்க முடிவு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல்

மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வரி வசூலிக்க முடிவு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல்

12 ஆடி 2026 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 140


மதுபானங்களுக்கு கூடு தலாக, 10 ரூபாய் 'செஸ்' எனப்படும், கூடுதல் வரி வசூலிப்பது குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது; இதுதொடர்பாக சட்ட விதிகளில் திருத்தம் செய்ய, அரசு பரிசீலித்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டாஸ்மாக்' நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், மதுபான காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அதாவது, மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும்பட்சத்தில், 10 ரூபாய் வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

விசாரணை இதுதொடர்பான வழக்கில், மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்றி அமைக்க, புதிய அரசு முடிவு செய்துள்ளதாக, கடந்த விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமாரின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதன் விபரம்:

காலி மது பாட்டில் களை திரும்ப பெறும் திட்ட நடைமுறையை மறுசீரமைக்க, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தனியாக வசூலிப்பதற்கு பதிலாக, அந்த தொகையை மதுபானத்தில் எம்.ஆர்.பி., எனும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையுடன் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதிகபட்ச சில்லரை விலையை உயர்த்த அனுமதித்த பின், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது, மறு சுழற்சி செய்வது போன்ற பொறுப்புகளை, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருத்தங்கள் இதுதொடர்பாக, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள,  மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுபானங்களின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய், 'செஸ்' வரி விதிக்க, அரசுக்கு வணிக வரித்துறை ஆணையர் கருத்துரு அனுப்பி உள்ளார்.

மேலும், சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்ய, அரசு பரிசீலித்து வருகிறது. மது பாட்டில்களை அகற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை கடைப்பிடிக்கவும், மனிதர்கள், விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அனைத்து காலி பாட்டில்களும் சேகரிக்கப்பட அறிவுறுத்தப்படும்.

இதற்காக, க்யூ.ஆர்.குறியீடு அடிப்படையிலான கண்காணிப்பு முறையை செயல்படுத்தவும், மதுபான உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.