ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு முன்னாள் தலைமை நீதிபதிகளும் ஆதரவு;
12 ஆடி 2026 ஞாயிறு 06:28 | பார்வைகள் : 139
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், கூட்டாட்சி தத்துவமோ, அரசியல் சாசனமோ பாதிக்கப்படாது என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆறு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்,'' என, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை ஆய்வு செய்யும் பார்லி., கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி கூறினார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை, 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை, 2024 டிசம்பரில் நடந்த பார்லி., குளிர் கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. அந்த குழுவின் தலைவராக, ராஜஸ்தானின் பாலி தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவாவில் பல்வேறு தரப்பினரை சந்தித்து இக்குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர். வரும் 20ல் தொடங்கும் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், இக்குழு தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பணஜியில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை ஆய்வு செய்யும் பார்லி., கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி கூறியதாவது: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு, கூட்டாட்சிக்கு அல்லது ஜனநாயகத்திற்கு எதிரானதா என்பது தான் எங்களின் முதல் கேள்வியாக இருந்தது.
இது குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆறு பேர் உட்பட சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டோம். அவர்கள் அனைவரும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி கட்டமைப்பையோ, ஜனநாயகத்தையோ அல்லது அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பையோ எவ்விதத்திலும் பாதிக்காது என, உறுதியளித்துள்ளனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், சட்ட கமிஷனின் தலைவர் மற்றும் பல அரசியல் சாசன வல்லுநர்களும் இதே கருத்துக்களையே தெரிவித்துள்ளனர். கடந்த 1952 - 67 வரை லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்கள் ஒன்றாகவே நடத்தப்பட்டன. பின், சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. அவசரநிலை பிரகடனம், பல்வேறு மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவே, இந்த தேர்தல் சுழற்சி முறை சீர்குலைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire