Paristamil Navigation Paristamil advert login

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம்..!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி  மரணம்..!

11 ஆடி 2026 சனி 17:16 | பார்வைகள் : 164


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சிங்கார வேலனே தேவா.. பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.

இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார். 1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை மணந்த ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் மட்டுமே.

அவரும் இந்த வருட தொடக்கத்தில் காலமானார். மகன் காலமான ஒரு சில மாதங்களிலேயே தற்போது எஸ்.ஜானகியின் மறைவு சினிமா உலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மைசூருவில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் ஜானகியின் உயிர் பிரிந்தது. ஜானகியின் மறைவை அவரது பேத்தி உறுதிப்படுத்தியிருக்கிறார்.