Paristamil Navigation Paristamil advert login

ஓமான் வளைகுடா அருகே மூன்று குண்டுவெடிப்புகள் - ஈரானில் பதற்றம்!

ஓமான் வளைகுடா அருகே மூன்று குண்டுவெடிப்புகள் - ஈரானில் பதற்றம்!

10 ஆடி 2026 வெள்ளி 12:46 | பார்வைகள் : 169


ஓமான் வளைகுடாவிற்கு அண்மையில் அமைந்துள்ள, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தைக் கொண்ட தெற்கு ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தின் கொனாரக் (Konarak) பகுதியில் மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளது.

அண்மையில் தெற்கு ஈரானின் பல பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் விமான நிலையங்கள், தளவாட வலையமைப்புகள் மற்றும் புஷெஹ்ர் (Bushehr) பகுதியில் அமைந்துள்ள அணுசக்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டதாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு ஈரானில் தொடருந்து தண்டவாளங்கள் உள்ளிட்ட சில பொதுமக்கள் உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானிய அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்பதற்காக அழுத்தத்தை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு தாம் பணியப் போவதில்லை என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர், தெற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தின் அஹ்வாஸ் (Ahvaz) பகுதியிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஈரானின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பதற்றம் காரணமாக நிலைமையை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.