Paristamil Navigation Paristamil advert login

நீர்கொழும்பு சிறை மோதல் - 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது

நீர்கொழும்பு சிறை மோதல் - 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது

9 ஆடி 2026 வியாழன் 19:22 | பார்வைகள் : 138


நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அவர்களது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மரண பரிசோதனை அறிக்கைகளின்படி, தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் பிரேத பரிசோதனைகள், ஐந்து பேர் கொண்ட விசேட நீதிமன்ற மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களினாலும், மேலும் 9 மரணங்கள் கொடூரமான தாக்குதல்கள் காரணமாகவும் ஏற்பட்டுள்ளதாக மரண பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு மரணம் தொடர்பான தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படாமல் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிறைச்சாலை காவலரின் மரணம் குறித்து இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், அந்த மரண பரிசோதனைக்கான சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில் 24 பேரின் மரண பரிசோதனைகள் நிறைவடைந்து சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 4 சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நால்வரில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவர் சுஜீவ விக்ரமநாயக்கவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நீதிமன்ற மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் வைத்தியர்களான பிரசன்ன அப்புஹாமி, சமந்த விஜேரத்ன, சமிந்த ராஜபக்ஷ மற்றும் ரமேஷ் அக்கியாவன்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேத பரிசோதனைகளை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா அவர்கள் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மறுபுறம், இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது ஒரு 'குற்றக் களம்' ஆகக் கருதப்படுவதால், அங்கு கைதிகளைத் தொடர்ந்து வைத்திருப்பது உகந்ததல்ல என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தினால் சிறைச்சாலை வளாகத்திற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அந்தச் சேத விபரங்கள் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.