Paristamil Navigation Paristamil advert login

உதவி பேராசிரியர் தேர்வில் குழப்பம்: மதிப்பீடு முறையை ஆய்வுக்கு உட்படுத்த அண்ணாமலை

உதவி பேராசிரியர் தேர்வில் குழப்பம்: மதிப்பீடு முறையை ஆய்வுக்கு உட்படுத்த அண்ணாமலை

10 ஆடி 2026 வெள்ளி 13:05 | பார்வைகள் : 143


உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடந்தத் தேர்வு முடிவுகளில் பல குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களையும் எழுந்துள்ளதாக ' வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.

பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.

இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.