Paristamil Navigation Paristamil advert login

காவல்துறைக்கு ஆயுதப் பயன்பாட்டில் சட்டப்பூர்வ முன்னுரிமை: தேசிய சபையில் மசோதா நிறைவேற்றம்!!

காவல்துறைக்கு ஆயுதப் பயன்பாட்டில் சட்டப்பூர்வ முன்னுரிமை: தேசிய சபையில் மசோதா நிறைவேற்றம்!!

9 ஆடி 2026 வியாழன் 05:36 | பார்வைகள் : 367


தேசிய சபையில் காவல்துறையினரும் ஜொந்தாமினர்(gendarmes) அதிகாரிகளும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது அவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்பட்டதாக முன்கூட்டியே கருதும் வகையிலான மசோதா 313 ஆதரவு வாக்குகளுடனும் 199 எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டது. மத்திய வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா அடுத்த கட்டமாக செனட் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மசோதாவை ஆதரிப்பவர்கள், காவல்துறையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது அவர்கள் மீது தானாகவே சந்தேகம் எழுப்பப்படக் கூடாது என்றும், இந்த சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்கும் என்றும் வாதிடுகின்றனர். அதேவேளை, மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் இது நீதித்துறை கண்காணிப்பை பலவீனப்படுத்தி, உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளன.

மசோதாவை தடுக்க இடதுசாரி உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான திருத்தங்களை முன்வைத்த போதிலும் அவை வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை "கொலை செய்ய அனுமதி வழங்கும் சட்டம்" என கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒப்பந்தங்களுடன் இந்த சட்டம் முரண்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.