Paristamil Navigation Paristamil advert login

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் இருப்பது யார்? வெளியானது பரபரப்பு தகவல்!

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் இருப்பது யார்? வெளியானது பரபரப்பு தகவல்!

27 வைகாசி 2026 புதன் 08:32 | பார்வைகள் : 166


அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா பின்னணியில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி.,யுமான அபிஷேக் மனு சிங்வி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4ம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. இதையடுத்து, அபிஷேக் மனு சிங்வியை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், உடனடியாக சென்னை அனுப்பி வைத்தார். அவரது ஆலோசனையின் அடிப்படையிலேயே, வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன், விஜய் ஆட்சி அமைத்தார்.

பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தினால் தான், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன்' என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அபிஷேக் மனு சிங்வி, 'யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது, அதிக இடங்களில் வென்ற கட்சியைத்தான் அழைக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தார்

காங்கிரஸ் மட்டுமல்லாது, வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் வாயிலாக த.வெ.க., ஆட்சியை வலுப்படுத்தியதோடு, முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க.,வை முதல்வர் விஜய் தனிமைப்படுத்தியுள்ளார் என த.வெ.க.,வினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் நெருக்கடி தரலாம் என்பதால், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில், அக்கட்சி இறங்கியுள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் வென்று, 118 என்ற எண்ணிக்கையை கடந்து விட்டால், ஐந்து ஆண்டுகள் த.வெ.க., ஆட்சியை அசைக்க முடியாது என, அபிஷேக் சிங்வி ஆலோசனை கொடுத்தார் என்றும், அதன்படியே முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சியினர் கூறுகின்றனர்.

எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்கும் முதல்வர் விஜயின் அதிரடி அரசியல், அ.தி.மு.க.,வை மட்டுமல்லாது, தி.மு.க., - பா.ம.க.,வையும் அதிர வைத்துள்ளது. தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், தி.மு.க.,விலேயே சிலரும், த.வெ.க., வலையில் சிக்கக் கூடும் என்ற அச்சம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.