Paristamil Navigation Paristamil advert login

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பது ஏற்புடையது அல்ல: மார்க்சிஸ்ட்

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பது ஏற்புடையது அல்ல: மார்க்சிஸ்ட்

27 வைகாசி 2026 புதன் 05:20 | பார்வைகள் : 150


அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிய உடனடியாக அவர்களை தவெகவில் சேர்ப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையது இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏக்கள் செயல்படுகின்றனர். வேலுமணி தலைமையிலான குழுவினர்  சட்டசபையில் தவெக அரசுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வேலுமணி  ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இன்று மேலும் 1 எம்எல்ஏ ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்வதும், உடனடியாக  தவெகவில் சேர்வதும் தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.  தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் த வெகவில் சேர்வது அவர்கள் விரும்பி எடுத்த முடிவு என்று சொன்னாலும்,  எவ்வித  பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத முடியவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

சட்டசபையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும்  உடனடியாக அவரகளை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்படையது இல்லை என்பதை மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் தெரிவித்துள்ளார்.