Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

26 வைகாசி 2026 செவ்வாய் 15:42 | பார்வைகள் : 162


எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், வரும் நாட்களில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான உயர்வையோ அல்லது விலை குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக முண்டியடிப்பதாக மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

ஆயினும், இதுவரை அத்தகைய எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

"எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பாகப் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதேபோல், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரப்பப்படும் பிரசாரங்களில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருட்களும், ஏழாம் மாதம் (ஜூலை) இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்புகளும் தற்போது நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்த மாதத்தில் வரவிருந்த அனைத்துக் கப்பல்களும் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. அத்துடன், இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவுள்ளன. அந்த எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் எரிபொருளை அடுத்த மாதத்திலும் விநியோகிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்திருந்த போதிலும், தற்போது அந்த விலை படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

இந்த விலை மேலும் குறையும் என நாம் நம்புகிறோம். எனவே, ஏப்ரல் மாதத்தில் எரிபொருளை அதிக விலைக்கு விற்க வேண்டியிருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.

விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்றாலும், முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது போல் விலையை 700 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை. அந்தச் சூழ்நிலை இப்போது நீங்கியுள்ளது." என்றார்.