Paristamil Navigation Paristamil advert login

கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் தற்காலிக பயணத்தடை விதித்தது அமெரிக்கா!

கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் தற்காலிக பயணத்தடை விதித்தது அமெரிக்கா!

25 வைகாசி 2026 திங்கள் 09:15 | பார்வைகள் : 130


ஆபிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்திற் கொண்டு, அமெரிக்காவின் சட்டபூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் குறிக்கும் 'கிரீன் கார்ட்' வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்கா தற்காலிக பயணத்தடையை விதித்துள்ளது.

இதன்படி, கடந்த 21 நாட்களில் கொங்கோ , உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் எவரும் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த 30 நாட்கள் எபோலா பயணத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனினும், எபோலா வைரஸ் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு இந்தத் தடையை கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நீடிப்பது அவசியமானது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சட்டபூர்வ நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்களுக்கு இந்த அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்துவது, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அவசரகாலப் பொறுப்பு வளங்களை நிர்வகிப்பதற்கும் இடையே ஒரு சரியான சமநிலையை வழங்கும்" என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க பொதுச் சுகாதாரச் சட்டத்தின் 'டைட்டில் 42' பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்ய இந்தச் சட்டம் கூட்டாட்சி சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கிறது.

கொங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலாவின் அரிய மற்றும் ஆபத்தான 'புந்திபுகியதிரிபு தீவிரமடைந்து வருவதை அடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது:

கொங்கோவில் இந்த வைரஸ் பரவல் தேசிய அளவிலான பெரும் வெடிப்பாக மாறுவதற்கான அபாயத்தை உலக சுகாதார ஸ்தாபனம் 'மிகவும் அதிகம்' என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

கொங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள இந்த எபோலா பரவலை உலகளாவிய கவலைக்குரிய சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

வரலாற்று ரீதியாக, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவின் இவ்வாறான பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து எப்போதும் விலக்களிக்கப்பட்டே வந்துள்ளனர். கொவிட்-19 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த 'டைட்டில் 42' உத்தரவுகளோ அல்லது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பல்வேறு பயணத்தடைகளோ இவர்களைப் பாதித்திருக்கவில்லை. அந்த வகையில், தற்போதைய எபோலா பயணத்தடை ஒரு விதிவிலக்கான மற்றும் கடுமையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.