Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளை கைவிட்ட விவகாரம்: போர்த்துகலில் பிரெஞ்சு பெண்மணி கைது!!

குழந்தைகளை கைவிட்ட விவகாரம்: போர்த்துகலில் பிரெஞ்சு பெண்மணி கைது!!

21 வைகாசி 2026 வியாழன் 21:03 | பார்வைகள் : 331


போர்த்துகலில் சாலையோரத்தில் தனியாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் தாய் வியாழக்கிழமை 21ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக போர்த்துகீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை 19ம் திகதி லிஸ்பனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாலையோரத்தில் தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 41 வயதுடைய அவர்களின் தாய் மத்திய போர்த்துகலின் பாத்திமா நகரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக 55 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பூர்வீகம் வெளியிடப்படாத நிலையில், மனநலப் பிரச்சினைகளுக்காக அவர் ஏற்கனவே காவல் மற்றும் நீதித்துறை பதிவுகளில் இருந்ததாக விசாரணைக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர்களிடம் மாற்று உடைகள், பழங்கள், பிஸ்கட் பொதிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைகளின் கண்களை கட்டிய பின்னரே அவர்கள் சாலையோரத்தில் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் கொல்மார் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நீதித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. குழந்தைகளை பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தவரிடமிருந்து பிரித்தல், சிறார்களின் பாதுகாப்பு மற்றும் நலனை ஆபத்துக்குள்ளாக்கல், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களை கைவிடல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 11ஆம் திகதி, 41 வயதுடைய பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.