Paristamil Navigation Paristamil advert login

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளால் சர்ச்சையில் சிக்கிய நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளால் சர்ச்சையில் சிக்கிய  நாமல்

21 வைகாசி 2026 வியாழன் 14:20 | பார்வைகள் : 109


கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசினால் தங்களின் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டபடி திசைதிருப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (21) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை சட்டபூர்வமாக, சிறைச்சாலை அதிகாரிகளின் முன்னிலையிலேயே தாம் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு இருக்கையில் மக்கள் பணத்தை வீணடித்துக்கொண்டு பிரான்ஸுக்குச் சென்று அவரை ரகசியமாக சந்திக்கவேண்டிய தேவை எமக்கோ அல்லது ராஜபக்ஷக்களுக்கோ கிடையாது என்றார்.
அவ்வாறான குற்றச்சாட்டுகள் மக்கள் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும் என்றும் அவர் சாடினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு தற்போதைய அரசில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய நாமல் ராஜபக்ஷ, தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி-யின்) தீவிர உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்பதுடன், தாக்குதல்காரரின் தந்தை ஜே.வி.பி-யின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் என்பதும் வெளிப்படையானது என்றார்.

தாக்குதல் கோப்புகளை மூடிமறைத்தவர்களிடமே தற்போது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு, ராஜபக்ஷக்களையும் பிள்ளையானையும் இதில் தொடர்புபடுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெறும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும், இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளின் இறுதிப் பின்னணி ஜே.வி.பி-யிடமே இருப்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், தேர்தல் காலங்களில் சர்வதேச நாடுகளின் தொடர்புகள் மற்றும் சான்றுகள் தம வசம் இருப்பதாகக் கூறியவர்கள், தற்போதைய தங்களது ஆட்சியில் ஏன் அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சுகள் தற்போது ஜே.வி.பி-யின் விருப்பத்துக்கு ஏற்பவே சட்டத்தை வளைத்து வருவதாகவும் அவர் சாடினார்.

இராணுவத்தினரை அவமதித்ததாக ராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், எல்.டி.டி.ஈ அமைப்பைத் தவிர, இலங்கையின் வரலாற்றில் ஜே.வி.பி-யினரே கடந்த காலங்களில் அதிகளவிலான இராணுவத்தினரை படுகொலை செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

தங்களின் அரசியல் தோல்விகளையும், இராணுவத்தினருக்கு இழைத்த அநீதிகளையும் மறைப்பதற்காகவே இராணுவத்தினர் குறித்து ஜே.வி.பி தற்போது நாடகமாடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, தற்போதைய நாடாளுமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகம் போல மாற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது வரப்பிரசாதங்கள் குறித்துப் பேசும்போது அவர் வெளியேற்றப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் சபாநாயகரைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்றும் தனது பேட்டியில் மேலும் வலியுறுத்தினார்.