Paristamil Navigation Paristamil advert login

அமைச்சரவையில் அதிமுக சேர்ந்தால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்: மார்க்சிஸ்ட்

அமைச்சரவையில் அதிமுக சேர்ந்தால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்: மார்க்சிஸ்ட்

20 வைகாசி 2026 புதன் 09:28 | பார்வைகள் : 119


அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைப்பது என்கிற முடிவுக்கு தவெக செல்லுமானால் நிச்சயமாக நாங்கள் எங்களின் ஆதரவு முடிவை மறு பரிசீலனை செய்வோம் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற வகையில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளித்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் ஆட்சி என்பது அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவை அவர்கள் (தவெக) அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதோ, அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெறுவது என்பதோ மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. அவர் (முதல்வர் விஜய்) சொல்லி இருக்கின்ற ஒரு நல்லாட்சி என்பதற்கே விரோதமாக அமையும்.

ஏற்கனவே அதிமுக, திமுக என இரண்டுக்கும் எதிராகத்தான் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அத்தகைய அணியின் ஒரு ஆதரவை  பெற்று தவெக ஆட்சியில் தொடருவது என்பது மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக அமையும். நிச்சயம் அத்தகைய ஒரு நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மீறி அவர்கள் அதிமுகவின் ஒரு கோஷ்டியை சேர்த்துக் கொள்வதோ, அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைப்பது என்கிற முடிவுக்கு தவெக செல்லுமானால் நிச்சயமாக நாங்கள் எங்களின் முடிவை மறு பரிசீலனை செய்வோம்.

இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.