Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

18 வைகாசி 2026 திங்கள் 09:15 | பார்வைகள் : 163


ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பயங்கர தீ ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் அல் தாஃப்ரா பகுதியில் அமைந்துள்ள பராகாஹ் அணுமின் நிலையத்தின் அருகில் ஞாயிற்றுக்கிழமை 17.05.2026 காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், தாக்குதலால் அப்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அணுமின் நிலையத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், உயிரிழப்புகள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவை ஏற்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு, யார் மீதும் அமீரகத்தின் அதிகாரிகள் குற்றம்சாட்டவில்லை.

மேலும், அபுதாபியின் பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியான ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அமைதி ஒப்பந்தத்துக்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

இதனால், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டும், ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியும் தங்களின் எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.