எபோலா பரவல் சர்வதேச அவசரநிலையாக பிரகடனம் - WHO அறிவிப்பு!
17 வைகாசி 2026 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 129
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தை, "சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை" என உலக சுகாதார நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த எபோலா பரவலானது 'புந்திபுகியோ' எனப்படும் குறிப்பிட்ட வைரஸ் வகையினால் ஏற்பட்டுள்ளது.
பொதுவாகக் காணப்படும் 'எபோலா-சையர்' வைரஸ் வகைகளுக்கு தடுப்பூசிகள் உள்ள போதிலும், இந்த புந்திபுகியோ வைரஸிற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரத்தியேக தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இல்லை என்பதால் தற்போதைய நிலைமை "அதிதீவிரமானது" என வர்ணிக்கப்பட்டுள்ளது.
இது இன்னும் உலகளாவிய பெருந்தொற்று நிலையை அடையவில்லை என்றாலும், கொங்கோவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மிக உயர்ந்த ஆபத்துக் கட்டத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வரையிலான தரவுகளின்படி, கொங்கோவின் இட்டூரி மாகாணத்தில் உள்ள புனியா, ரம்பாரா மற்றும் மொங்வாலு ஆகிய மூன்று சுகாதார வலயங்களில் 246 சந்தேகத்திற்கிடமான தொற்றாளர்களும், 80 சந்தேகத்திற்கிடமான மரணங்களும் பதிவாகியுள்ளன.
ஆரம்பகட்ட மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்படும் வீதம் அதிகமாக உள்ளதால், உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வைரஸ் ஏற்கனவே சர்வதேச எல்லைகளைத் தாண்டிப் பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஆவணப்படுத்தியுள்ளது.
கொங்கோவிலிருந்து உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவுக்குப் பயணித்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இட்டூரி மாகாணத்திலிருந்து கொங்கோவின் தலைநகரான கின்ஷாசாவுக்குத் திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் 21 நாட்களுக்கு சர்வதேச பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளும் தங்களது தேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளைச் தயார் நிலையில் வைப்பதுடன், எல்லைகளிலும் முக்கிய உள்நாட்டு வீதிகளிலும் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
அச்சம் காரணமாக நாடுகள் தங்களது எல்லைகளை முழுமையாக மூடவோ அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லைகள் மூடப்பட்டால், மக்கள் உத்தியோகபூர்வமற்ற இரகசிய வழிகளில் எல்லைகளைக் கடக்க முயல்வார்கள் என்றும், அது கண்காணிப்புப் பணிகளை முற்றிலும் முடக்கிவிடும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்ககை விடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan