Paristamil Navigation Paristamil advert login

ஒரு வேளை சாப்பாடு கூட கொடுத்ததில்லை; சீமானை வெளுத்த இலங்கை எம்.பி.

ஒரு வேளை சாப்பாடு கூட கொடுத்ததில்லை; சீமானை வெளுத்த இலங்கை எம்.பி.

17 வைகாசி 2026 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 135


இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை. ஆனால் அந்த மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான் என இலங்கை எம்பி ராமநாதன் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி; முதல்வர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் இருந்ததால் அதை பார்க்க முடியவில்லை. தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள்.

எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையை பேசினார். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு ஓட்டளித்து இருக்கிறார்கள். எங்களது தமிழ் இன போராட்டம் சிதைக்கப்பட்டது. அது எங்களுடைய வலி.

இதனை விஜய் தனது பிரசாரத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஓட்டுகளை பெறுவதற்காக எங்களுடைய வலியை எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அதனை தமிழக மக்களிடம் சொல்வதை விட சீமான் வேறு எதையும் செய்யவில்லை. குறைந்தது யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரத்தில் வசிக்கும் எங்களது மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் அந்த மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை தன்னுடைய அரசியலுக்காக பெற்றவர் தான் சீமான். பெற்றும் எதுவும் செய்யவில்லை என்பதுதான் எனது முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

இவர் இப்படியே தொடர்ந்து செல்வார் என்றால் இவரது மகன் அமெரிக்காவில் படிக்கலாம். யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள் கடும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தான் சீமானை அரசியலில் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த கோபமும் கிடையாது. சீமான் சொல்லும் ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான். இவ்வாறு இலங்கை எம்பி கூறினார்.