Paristamil Navigation Paristamil advert login

வழக்கறிஞராக அவதாரம் எடுத்த மம்தா; கருப்பு அங்கியில் களமிறங்கி வாதம்

வழக்கறிஞராக அவதாரம் எடுத்த மம்தா; கருப்பு அங்கியில் களமிறங்கி வாதம்

15 வைகாசி 2026 வெள்ளி 13:44 | பார்வைகள் : 141


மேற்கு வங்க அரசியலில் அடுத்த திருப்பமாக முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று திடீரென வழக்கறிஞர் உடையில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு கடந்த ஏப்., 23 மற்றும் ஏப்., 29 என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின், திரிணமுல் காங்., தொண்டர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் தாக்கப் பட்டதாக அக்கட்சி புகார் எழுப்பியது. இதுகுறித்து கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் வாதாடுவதற்காக, முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று வழக்கறிஞர் உடை அணிந்து வந்திருந்தார்.

நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்தசாரதி சென் அடங்கிய அமர்வு முன் அவர் வைத்த வாதம்: தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையில் யாரும் தப்பவில்லை. சிறுவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்., தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையெல்லாம் போலீசார் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேற்கு வங்க மாநிலம் புல்டோசர் கலாசாரம் கொண்டது அல்ல; மக்களை காப்பாற்ற நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

மம்தா பானர்ஜி கடந்த 1982ல் சட்டப் படிப்பை முடித்தவர். காங்., கட்சியில் இருந்த காலத்தில், சில வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே, மம்தா பானர்ஜி வழக்கறிஞர் உடையில் ஆஜரானது குறித்து இந்திய பார் கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது. முதல்வராக பதவி வகித்த காலத்தில் வக்கீல் உரிமத்தை புதுப்பித்து இருந்தாரா? அது தற்போதும் நடைமுறையில் இருக்கிறதா? என்பது குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும்படி மேற்கு வங்க பார் கவுன்சிலிடம் விளக்கம் கேட்டுள்ளது.