Paristamil Navigation Paristamil advert login

100% எத்தனாலில் வாகனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி

100% எத்தனாலில் வாகனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி

15 ஆனி 2026 திங்கள் 08:24 | பார்வைகள் : 283


வாகனங்கள் 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்குவதற்கு மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

நம் நாடு, ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதி சுமையைக் குறைக்கும் விதமாக, பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

கரும்பு, சோளம் போன்றவற்றின் கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எரிபொருளில் எத்தனால் கலப்பது சமீபகாலமாக உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் பெட்ரோலுடன் லிட்டருக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை எத்தனால் கலப்பு என குறைந்த அளவில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம், ஓராண்டுக்கு மேலாக 20 சதவீத அளவில் கலக்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக, சமீபத்தில் 'பிளெக்ஸ் -ப்யூல்' வகை வாகனத் திட்டம் நம் நாட்டில் அறிமுகமானது. இந்த வகை வாகனங்களில் 85 சதவீதம் எத்தனால் கலந்த இ - 85 எனப்படும் பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதற்கான முதல் பிரத்யேக வினியோக நிலையமும் டில்லியில் கடந்த வாரம் துவங்கி வைக்கப்பட்டது.  இந்நிலையில், பெட்ரோல் இல்லாமல் 100 சதவீதமும் எத்தனாலை பயன்படுத்தி வாகனங்களை இயக்க சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.