Paristamil Navigation Paristamil advert login

மேகதாது விவகாரத்தில் தவறான தகவல் பரப்பும் கர்நாடக முதல்வர்; அமைச்சர் நிர்மல்குமார்

மேகதாது விவகாரத்தில் தவறான தகவல் பரப்பும் கர்நாடக முதல்வர்; அமைச்சர் நிர்மல்குமார்

14 ஆனி 2026 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 158


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க, தமிழக அரசுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக, கர்நாடக முதல்வர் சிவக்குமார், தவறான தகவலை பரப்புகிறார்,'' என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தேனியில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் தமிழக, கர்நாடக அரசு வழக்கு நடத்தி வருகின்றன. அணை கட்டுவதை எதிர்க்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கர்நாடக முதல்வர் சிவக்குமார் கூறியது தவறான தகவல் ஆகும்.

இவ்வழக்கில் முதல்வர் விஜய் சரியான சட்ட நடவடிக்கை எடுப்பார். இதேபோல் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு கூறியதும் தவறான தகவல் தான். முல்லை பெரியாறு அணையின் நீர்ம ட்டத்தை உயர்த்தும் முன் மக்கள் யாரும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வைகை அணையில் ஆய்வு செய்த அமைச்சர் கூறியதாவது:

வைகை அணை நீர்தேக்கப்பகுதியில் 15 அடி வரை படிந்துள்ள வண்டல் மண் படிமங்களை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனுமதி கிடைத்தவுடன் இரு மாதங்களுக்குள் வைகை அணை தூர்வாரும் பணி துவங்கும். விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை வணிக ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ கடத்த முயன்றால் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.