Paristamil Navigation Paristamil advert login

வாகன எரிபொருளாக 100 % எத்தனால் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி: நிதின் கட்கரி

வாகன எரிபொருளாக 100 % எத்தனால் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி: நிதின் கட்கரி

14 ஆனி 2026 ஞாயிறு 08:27 | பார்வைகள் : 186


வாகன எரிபொருளாக 100% எத்தனால் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நேற்று இரவு 8 மணிக்கு 100 சதவீத எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான விதிகளை இறுதி செய்து, கோப்பில் கையெழுத்திட்டேன். மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான வேகன் ஆரின் 100% எத்தனாலில் இயங்கக்கூடிய மாடலை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரபல ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், 100% எத்தனாலில் இயங்கும் திறன் கொண்ட இரண்டு பிளெக்ஸ்-பியூல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொயோட்டா, சுசுகி, எம்ஜி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் 100% எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளன.

இதன் மூலம், பெட்ரோலுக்கு இணையான ஒரு சிறந்த மாற்றாக எத்தனால் விளங்கும். நான் இதைப் பற்றி முதலில் பேசியபோது மக்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். சில நண்பர்கள் விமர்சிக்கவும் செய்தார்கள். இப்போது இத்தகைய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில், நாக்பூரில் ஒரு ஹைட்ரஜன் பம்ப் மற்றும் இரண்டு ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்களைக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்தை நாங்கள் தொடங்கவுள்ளோம். எலக்ட்ரோலைஸர் மூலம் தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.