Paristamil Navigation Paristamil advert login

அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என ஈரான் உறுதி - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என ஈரான் உறுதி - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

1 ஆனி 2026 திங்கள் 05:53 | பார்வைகள் : 187


ஈரான் தனது நாட்டில் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதற்கான முழுமையான உத்தரவாதங்களை தாம் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

எனினும், கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய புதிய அமைதி ஒப்பந்த வரைவு ஒன்றை அவர் மீண்டும் தெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளதால், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


பல வாரங்களாக இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், கடுமையான வார்த்தைப் போர்களும் அவ்வப்போது ஏற்படும் இராணுவ மோதல்களும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதிலும், போரை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதிலும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன .

நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரான் பரிசீலிப்பதற்காக அதிபர் ட்ரம்ப் மிகவும் கடுமையான நிபந்தனைகள் அடங்கிய புதிய கட்டமைப்பு ஒன்றை சனிக்கிழமையன்று திருப்பி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தில் சனிக்கிழமை இரவு ஒளிபரப்பான நேர்காணலில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

"எந்தவொரு உடன்படிக்கைக்கும் நான் எதிர்பார்க்கும் ஒரே உத்தரவாதம், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதுதான். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள், அது மிகவும் சுவாரஸ்யமானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை முடிக்க எனக்கு எந்த அவசரமும் இல்லை. நாம் நினைப்பது மெதுவாக ஆனால் நிச்சயமாகக் கிடைக்கும். ஒருவேளை நாம் நினைப்பது நடக்காவிட்டால், நாங்கள் வேறு வழியில் (இராணுவ நடவடிக்கை மூலம்) இதனை முடிவுக்குக் கொண்டு வருவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்த கருத்தை ஈரானிய ஊடகங்கள் கடுமையாக மறுத்துள்ளன. எந்தவொரு தீவிரமான பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களது 12 பில்லியன் டாலர் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்படும் என்ற ட்ரம்பின் முந்தைய கூற்றை "அடிப்படற்றது" என்றும் தேஹ்ரான் விமர்சித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை எவ்வித வரிகளுமின்றி திறக்க ஈரான் சம்மதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தாலும், ஒப்பந்த உரையில் அத்தகைய எந்தவொரு நிபந்தனையும் இல்லை என ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக, ஹோர்முஸ் நீரிணை மீது ஈரானின் முழு இறையாண்மையை நிலைநாட்டும் புதிய சட்டமூலம் ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர் அலிரேசா சலிமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளின் பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டிருந்தது. இதனால் தினசரி வான்வழித் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், பிராந்தியத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை.

தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்க இராணுவ ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை  தெரிவித்துள்ளது. எனினும், இதனை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த வாரம் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களும், அதற்கு ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களும் தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பிந்தைய மிக மோசமான மோதலாகப் பதிவாகியுள்ளது.

மறுபுறம், லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தனது தரைவழித் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் 30 கிலோமீட்டருக்கும் (20 மைல்கள்) அதிக தூரம் ஊடுருவியுள்ளதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, தெற்கு லெபனானின் மேலும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் சனிக்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கடுமையாகச் சாடியுள்ள லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் இஸ்ரேல் தங்களை சாம்பலாக்கும் கொள்கையையும் கூட்டுத் தண்டனையையும் வழங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், உடனடியாக ஒரு உண்மையான போர்நிறுத்தம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இப்போராட்டம் வெடித்தது. ஏப்ரல் 17 அன்று இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அது இருதரப்பாலும் ஒருபோதும் மதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.