Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் விஜயிடம் ஏற்றுமதியாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

முதல்வர் விஜயிடம் ஏற்றுமதியாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

31 வைகாசி 2026 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 160


தமிழகத்தை உலகின் முன்னணி ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக உருவாக்க, தொழில் துறையினருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என, முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி  மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், முதல்வர் விஜயை சந்தித்து, திருப்பூரின் பின்னலாடை தொழில் குழுமத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினர்.இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 68 சதவீதம் பங்களிப்பு செலுத்திவருகிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் வாயிலாக, ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது.

தமிழக பொருளாதாரத்தில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறை முக்கியமானதாக உள்ளது. இந்த துறை சார்ந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்; இவர்களில், 65 சதவீதம் பேர் பெண்கள். தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியை, வரும் 2030க்குள், 15 பில்லியன் டாலராக (ஏறத்தாழ 1.43 லட்சம் கோடி) உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 38 நாடுகளுடன் இந்தியா, வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இதன் வாயிலாக, புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் தமிழகத்தை நோக்கி வரத்துவங்கியுள்ளன. பின்னலாடை உற்பத்தி தொழிலாளர்களுக்கு, குறைந்த வாடகைக்கு வீடு வசதி ஏற்படுத்தித்தரவேண்டும். கோவை விமான நிலையத்தை, சர்வதேச சரக்கு போக்குவரத்து வசதியுடன் மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நவீன மயமாக்கலுக்கு மூலதன மானியம் வழங்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயன்பாட்டுக்கு தனி நிதி ஒதுக்கவேண்டும். ஒற்றைச் சாளர முறையில், அனுமதிகளை எளிமையாக்கவேண்டும். ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு திட்டங்களை செயல்படுத்திவரும் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு, நிலைத்த உற்பத்தி திட்டங்கள் வாயிலாக ஆதரவு அளிக்கவேண்டும்.

சர்வதேச வர்த்தகர் - உற்பத்தியாளர் சந்திப்பு மற்றும் உலகளாவிய பிரான்டிங் முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். திருப்பூரில் பின்னலாடை மேம்பாட்டு வாரியம் அமைக்கவேண்டும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர், முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:

தொழில் வளர்ச்சிக்காக நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர், ஆயத்த ஆடை உற்பத்தி துறை வளர்ச்சிக்கு தேவையான முழு ஆதரவையும் அரசு வழங்கும்.

தொழில்துறையினருடன் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தை உலகின் முன்னணி ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். அரசின் செயல் திறன்மிக்க ஆதரவு வாயிலாக, வரும் 2030 க்குள், 15 பில்லியன் டாலர் ஆடை ஏற்றுமதி இலக்கை தமிழகம் நிச்சயம் அடையும். இவ்வாறு, அவர் கூறினார்.